புதுடெல்லி: ம.பி. சட்ட பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 76.22 % வாக்குகள் பதிவாகியுள்ளது. 230 உறுப்பினர் கொண்ட ம.பி. பேரவைக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. கடந்த 1956ல் ம.பி. மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்களில் இப்போதுதான் அதிகளவாக 76.22 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2018 தேர்தலில் 75.63 % பதிவானது. கடந்த தேர்தலை விட தற்போது 0.59% அதிகம் பதிவாகியுள்ளது. 2003க்கு பிறகு நடந்த தேர்தல்களில் வாக்கு பதிவு அதிகரித்து வருகிறது. 2003 தேர்தலில், 67.25 %, 2008ல் 69.78%, 2013ல் 72.13%, 2018ல் 75.63% பதிவாகியுள்ளது.
2003க்கு பின் நடந்த தேர்தல்களில் பாஜ மூன்று முறையும் காங்கிரஸ் ஒருமுறையும் வென்றுள்ளது. சட்டீஸ்கரில் குறைந்தது: காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சட்டீஸ்கர் பேரவைக்கு முதல் கட்டமாக 20 தொகுதிகளிலும் 2ம் கட்டமாக 70 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. சட்டீஸ்கர் பேரவை தேர்தலில் மொத்தம் 76.31 % வாக்கு பதிவாகியுள்ளது. இது கடந்த 2018 தேர்தலை விட சற்று குறைவு. 2018ல் 76.88% பதிவானது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் நடந்த முதல் கட்ட தேர்தலில் 78 %, 2ம் கட்ட தேர்தலில் 75.88 % பதிவாகியுள்ளது’’ என்றனர்.
ரூ340 கோடி பறிமுதல்
மபி தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன் பிறகு நடந்த சோதனைகளில்,ரூ40.18 கோடி பணம்,ரூ17 கோடி போதை பொருள்கள்,ரூ280 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள்,தங்க மற்றும் வெள்ளி நகைகள் உள்பட மொத்தம் ரூ340 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரி தெரிவித்தார்.