தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, எம்.சி.எம் கார்டன், முதல் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (21). இவர்மீது கொலை முயற்சி, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், கொருக்குப்பேட்டை, மூப்பனார் நகரை சேர்ந்தவர் கிளி (எ) தினேஷ் (23) என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் 10ம் தேதி கிளி (எ) தினேஷின் காலில் ஆகாஷ் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆகாஷ் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதுபற்றி அறிந்த தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலைபார்க்கும் தினேஷின் மூத்த சகோதரர் விக்கி (26) என்பவர், தனது தம்பியை கத்தியால் சரமாரி வெட்டிய ஆகாஷை பழிக்கு பழி வாங்க தீர்மானித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ராயபுரம், ராபின்சன் பூங்கா அருகே நடந்து சென்ற ஆகாஷை, விக்கி வழிமறித்து கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
தகவலறிந்த ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான விக்கியை தேடி வருகின்றனர்.