புதுடெல்லி: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த ெதாழிலாளர்களுக்கு 3 மாதத்தில் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.
தொடர்ந்து அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘ஒன்றிய அரசின் ‘இ-ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட (கிட்டத்தட்ட 28 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்) அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் ரேஷன் கார்டுகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுக்கள் வழங்க வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகளை வழங்குதல் தொடர்பாக பொது விளம்பரம் செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவற்றை காரணம் காட்டி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டுகளை மறுக்க முடியாது’ என்று உத்தரவிட்டது.