ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன்(36). இவர் பி.பார்ம் படித்து உள்ளார். இந்த நிலையில் அம்மூர் பஜார் வீதியில் கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் மருத்துவ பணிகள் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் நிவேதிதா தலைமையில் மருத்துவர் சக்திவேல், மருந்து ஆய்வாளர் வேலு ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று அங்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், ஆங்கில மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது உறுதியானது. இதனையடுத்து மாதவனை பிடித்து ராணிப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவம் பார்த்து வந்த கிளினிக்கை மூடி வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், மருத்துவ உபகரணங்கள், மருத்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார், மாதவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே இதேபோன்று புகாரில் சிக்கி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, மீண்டும் இந்த புகாரில் சிக்கியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.