கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஞ்சின் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே பழுது காரணமாக கரை ஒதுங்கிய விசைப்படகில் இருந்த 9 மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், நேற்று ஏராளமான படகுகளில் புறப்பட்டு சென்றனர். அதில் 9 மீனவர்கள் சென்ற படகு, நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கி பாறைகள் நிறைந்த பகுதியில் சிக்கி கொண்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விசைப்படகில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கரை ஒதுங்கியதை அறிந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், படகினை கைப்பற்றி அதில் இருந்த 9 தமிழக மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை 9 தமிழக மீனவர்களையும் நெடுந்தீவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து இன்று இலங்கை ஊர்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் 9 பேரிடமும் விசாரணை நடத்தியதில், எஞ்சின் கோளாறு காரணமாகவே எல்லை தாண்டி வந்ததாக தெறிவிக்கப்பட்டதையடுத்து மீனவர்களை எந்த நிபந்தனையுமின்றி இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.