ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு வாடி கடல் பகுதியில் 100 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. ராமேஸ்வரம் தீவு பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா ஆயில் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து ராமேஸ்வரம் தீவு பகுதியான மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடல்பகுதியில் மத்திய வருவாய்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையோடு இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மண்டபம் தெற்கு வாடி கடல் பகுதியிலிருந்து சந்தேகத்திற்கு இடமாக நாட்டு படகு வேகமாக சென்றுள்ளது. அந்த படகை மறித்து விசாரணையில் ஈடுபட்ட போது, முன்னும் பின்னும் முரணாக பதில் தெரிவித்ததை அடுத்து படகை சோதனை செய்ததில் சுமார் 100 கிலோ எடை கொண்ட கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் பிடிபட்ட நபரை விசாரித்த போது இதில் மேலும் 20 பேர் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் மத்திய வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். கடத்தலில் ஈடுபட்டபோது ஒரு பார்சலை தூக்கி வீசப்பட்டதாக கூறியதை அடுத்து கடலுக்குள் சென்று தேடக்கூடிய சிறப்பு பயிற்சி பெற்ற ஸ்குபா வீரர்கள் வரவழைக்கப்பட்டு கடலோர காவல்படை வீரர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தியது.