புதுடெல்லி: புதிய என்சிஇஆர்டி பாடப்புத்தங்களை தயாரிப்பதற்காக கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அது குறித்து அந்த குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் கூறியதாவது: சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை மாணவர்களுக்கு கற்பிக்க குழு வலியுறுத்தி உள்ளது. பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் சுயமரியாதை, தேசபக்தி மற்றும் தேசத்தின் பெருமையை உணர வேண்டும். தேசப்பற்று இல்லாத காரணத்தால் தான் ஒவ்வொரு ஆண்டும் பலரும் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியுரிமை பெறுகின்றனர்.
எனவே, அவர்கள் தங்கள் வேர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசம் மற்றும் கலாச்சாரத்தின் மீதான அன்பை வளர்த்துக் கொள்வது முக்கியம். சில மாநில கல்வி வாரியங்களில் ஏற்கனவே ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படுகிறது. அது இன்னும் விரிவுபடுத்த வேண்டுமென குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே இக்குழு பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற நாட்டின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.