Monday, June 3, 2024
Home » ராமநாதபுரத்தில் 40,519 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 922 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

ராமநாதபுரத்தில் 40,519 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 922 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

by Lakshmipathi

*அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 40,519 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 922 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்க பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் ஒன்றியம், குப்பாணிவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். எம்.பி நவாஸ்கனி, எம்.எல்.ஏக்கள் ராமநாதபுரம் காதர்பாட்ஷாமுத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன். திருவாடனை கரு.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் வரவேற்றார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், விவசாயிகள், மீனவர்கள், பனை விவசாயிகள், தொழிலாளர்கள் என ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் மகத்தான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்துள்ளார். சந்திராயன் 1 முதல் 3 திட்டங்களிலும் சாதித்த மயில்சாமிஅண்ணாதுரை, வனிதாமுத்தையா, வீரமுத்துவேல் மற்றும் மாணவ சமுதாயத்திற்கு முன்மாதிரியாக விளங்கக் கூடிய மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகிய விஞ்ஞானிகள் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து சாதித்தவர்கள்.

நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, பெண் குழந்தைகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம், புதுமைபெண் திட்டம், உதவித்தொகை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், சலுகைகள், விலையில்லா பொருட்கள் என அனைத்தையும் திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வில் உயர வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 நகராட்சி சத்துணவு மையங்கள், 24 பேரூராட்சி சத்துணவு மையங்கள், 868 கிராம பஞ்சாயத்து சத்துணவு மையங்கள் என 922 மையங்களில் காலை உணவுத் திட்டம் அனைத்து வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 ஆயிரத்து 519 மாணவர்கள் பயனடைவார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் மண்டபம் யூனியன் சேர்மன் சுப்புலெட்சுமிஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* ராமநாதபுரம்

ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன் முன்னிலையில் சேர்மன் கார்மேகம் துவங்கி வைத்தார். துணை தலைவர் பிரவீன் தங்கம், கவுன்சிலர்கள் மணிகண்டன், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேவிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் ஹமீதாய ராணி உசேன், புதுமடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் காமில்உசேன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

* சாயல்குடி

முதுகுளத்தூர் பேரூராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை செயல்அலுவலர் மாலதி முன்னிலையில் தலைவர் ஜாஷகான் துவங்கி வைத்தார். சாயல்குடி பேராட்சி அரசு தொடக்கப்பள்ளியில்(ஆங்கிலவழி கல்வி) செயல் அலுவலர் சேகர், தலைமையாசிரியர் கீதாரமணி முன்னிலையில் தலைவர் மாரியப்பன் துவங்கி வைத்தார். கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் ராஜமாணிக்கலிங்கம் துவங்கி வைத்தார்.நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் கிருஸ்துஞானவள்ளுவன் துவங்கி வைத்தார்.

* ஆர்.எஸ்.மங்கலம்
திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் யூனியன் சேர்மன் ராதிகா பிரபு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் தணிக்கை அருணா தேவி, மற்றும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சத்யா, மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் .உம்முல்சாமியா, வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள் நாகப்பன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராசு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் யூனியன் வைஸ் சேர்மன் சேகர். தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசுப்புரமணியன் (எ) கண்ணன், பேரூராட்சி சேர்மன் மெளசூரியா கேசர் கான், நகர் செயலாளர் கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

* பரமக்குடி

பரமக்குடி ஒன்றியம் என்.பெத்தனேந்தல் ஊ.ஒ.தொ பள்ளியில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் புதிய சமையலறை கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து குழந்தைகளுக்கு உணவுகளை பரிமாறினார். ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பரமசிவன் முன்னிலை வகித்தார்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா திட்டத்தின் சிறப்புகளை விளக்கினார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) தேவப்பிரிய தர்ஷினி, பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கலையூர் ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், பரமக்குடி ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நிர்வாகி துரைமுருகன். ஊராட்சி மன்றத் தலைவர் சுபேகா உள்ளிட்ட வருவாய் மற்றும் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* தொண்டி

தொண்டி கிழக்கு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் பேருராட்சி தலைவி ஷாஜகான் பானு துவக்கி வைத்தார். துனைத் தலைவி அழகு ராணி, செயல் அலுவலர் மகாலிங்கம், எஸ்எம்சி ராமு மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி தலைமை ஆசிரியை சாந்தி முன்னிலையில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ரம்யா, பேரூராட்சி வட்டார வள பயிற்றுனர் ராதா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

*ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் உள்ள 16 அரசுப் பள்ளிகளில் நேற்று தமிழக அரசின் காலை உணவு விரிவாக்க திட்டம் துவக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த எண். 1 நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர நாசர்கான் மாணவர்களுக்கு ரவா உப்புமா வழங்கி திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியை ராஜ லெட்சுமி, நகராட்சி கமிஷனர் கண்ணன் , கவுன்சிலர் அர்ச்சுனன், ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். இப்பள்ளியில் படிக்கும் 230 மாணவ, மாணவிகளுக்கு சில்வர் பிளேட்டில் ரவா உப்புமா, சாம்பார் காலை உணவாக வழங்கப்பட்டது. இதுபோல் ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் உள்ள 16 அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

three + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi