புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, மாநிலங்களவையில் நேற்று டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “இந்த மசோதா குறித்து, அவையில் எதிர்க்கட்சிகள் விவாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் எந்த எதிர்க்கட்சி தலைவரும் அல்லது எம்பி.யும் மக்களின் உரிமைகள் பற்றி கவலைப்படவில்லை.
மக்களின் விரிவான பொது ஆலோசனைக்கு பிறகு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. பெறும் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு பாரபட்சமின்றி ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்,’’ என்று கூறினார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலமாக, மாநிலங்களவையில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.