சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு வாக்களித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தார்கள். இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் 6 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜவின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பாஜவிற்கு ஆதரவாக வாக்களித்த ஹமிர்புர் தொகுதி எம்எல்ஏ ஆஷிஷ் சர்மா,டேரா தொகுதி எம்எல்ஏ ஹோசியார் சிங் மற்றும் நாலாகர் தொகுதி எம்எல்ஏ கேஎல் தாகூர் ஆகியோர் நேற்று தலைநகர் சிம்லாவிற்கு வந்தனர். எதிர்கட்சி தலைவர் ஜெய் ராம் தாகூரை சந்தித்து பேசினார்கள். பின்னர் சட்டப்பேரவை செயலாளரிடம் அவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து ஹோசியார் சிங் கூறுகையில், ‘‘நாங்கள் எங்களது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளோம். பாஜவில் இணைவோம். பாஜ வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவோம்” என்றார்.