லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில், டெல்லி, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மதுரா, முராதாபாத் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. முக்கிய சாலைகளும் ரயில் தண்டவாளங்களும் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியதால் முராதாபாத் வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கான்பூரில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மோசமான நிலையே உள்ளதால் பள்ளிகள் இயங்கவில்லை.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழைக்கு ஒரே நாளில் 19 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மின்னல் தாக்கி மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஒடிசா மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக இடி மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் நேற்று மட்டும் 10 பேர் இறந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் மாநில பேரிடர் மேலாண்மை குழு சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘அங்குல் மாவட்டத்தில் ஒருவர், போலங்கிரில் இருவர், பவுத்தில் ஒருவர், ஜகத்சிங்பூரில் ஒருவர், தேன்கனலில் ஒருவர், கோர்தாவில் நான்கு பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மூவரும் கோர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.