டெல்லி: இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. மேலும் ஆந்திரா, கோவா, தெலங்கானா, தமிழகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதால் கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழையையொட்டி வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒருவாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என்றும் கனமழை காரணமாக கர்நாடகாவில் மங்களூரு, முல்கி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டிலும் அவ்வப்போது சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.