திருவள்ளூர்: சென்னை இருப்புப்பாதை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். பணம் கொடுக்காதவர்களிடம் ஆபாசமாக பேசுகின்றனர். மேலும் ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு செய்வதாகவும், சில சமயங்களில் அத்துமீறி நடந்துக்கொள்வதாகவும் இருப்புப்பாதை காவல் உதவி மையத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீஞ்சூர் ரயில் நிலையத்தில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு பயணி மரணம் அடைந்தார். திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ஒரு திருநங்கை ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது, ரயிலில் சிக்கி கால்கள் துண்டானது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அன்று வியாசர்பாடி அருகே பெங்களுர் விரைவு வண்டி சிக்னலுக்காக நின்ற சமயம், அடையாளம் தெரியாத திருநங்கைகள் 2 பேர் ஒரு பயணியின் பாக்கெட்டில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடியுள்ளனர். அதேபோன்று, கடந்த ஏப்ரல் 29ம் தேதி ஜார்கண்டில் இருந்து பெரம்பூருக்கு வந்த விரைவு வண்டியில் மருத்துவ சிகிச்சைக்காக வந்த ஒரு பயணியிடம் ரூ.15 ஆயிரம் காணாமல் போனது சம்மந்தமாக விசாரணை செய்தனர். அப்போது, பணம் ரயிலில் கிடைத்ததாக திருநங்கைகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இருப்பினும், தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து இருப்புப் பாதை காவல் துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின்படி சென்னை எஸ்.பி. பொன்ராமு திருநங்கைகளின் சங்க நிர்வாகிகள் ஜெயா, சுதா மற்றும் சகிதா ஆகியோரை அழைத்துப்பேசி அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும், அவர்களின் சங்க உறுப்பினர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கினார். இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகார்கள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.