செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே ரயில்வே கேட் பழுதானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சாமியார் கேட் என்றழைக்கப்படும் ரயில்வே கேட் வழியாக ஆப்பூர், சட்டமங்கலம், திருக்கச்சூர், பேரமனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பைக், கார், வேன், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ரயில்வே கேட் நேற்று பழுதானது. ரயில்வே கேட் ஊழியர், சரி செய்ய முயன்றும் முடியவில்லை. இதனால் சாலையில் சுமார் 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. அவ்வழியாக வந்த ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. ரயில்வே கேட் ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆத்திரத்துடன் தண்டவாளத்துக்கு வந்தனர். அவ்வழியாக வந்த செங்கல்பட்டு- சென்னை கடற்கரை ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டது. தகவலறிந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்டது. அதற்கு பிறகே வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.