பெரம்பூர்: பெரம்பூர் லோகோ பணிமனையின் அவல் நிலையை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பூர் லோகோ ரயில்வே பணிமனையின் அவல நிலையை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கமான எஸ்ஆர்இஎஸ் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லோகோ பணிமனை கிளை துணை தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்ஆர்இஎஸ் தொழிற்சங்க நிர்வாக தலைவர் சூரிய பிரகாசஷ், இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், பெரம்பூர் லோகோ பணிமனை தனியார்மயமாவதை கண்டித்தும், தொழிலாளர்கள் அனைவருக்கும் கேன்டீனில் தரமான உணவு வழங்க வேண்டும், உடை மாற்ற இடவசதி செய்து தர வேண்டும், கழிவறை வசதி செய்து தர வேண்டும், தொழிலாளர்களுக்கும், சூப்பர்வைசர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.