சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் சிக்கியது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தது. 3 பேரில் ஒருவர் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான விடுதி மேலாளர் என்பது தெரிய வந்துள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் விருகம்பாக்கம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக அவரது உறவினரான விருகம்பாக்கம் முருகன் என்பவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. இரவு 11.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. இது தவிர திருவல்லிக்கேணி, புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஹோட்டல்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.