Monday, May 13, 2024
Home » சோதனை நடத்த வந்ததால் ஆத்திரம் போலீஸ்காரர் மீது பிரபல ரவுடி தாக்குதல்

சோதனை நடத்த வந்ததால் ஆத்திரம் போலீஸ்காரர் மீது பிரபல ரவுடி தாக்குதல்

by Lakshmipathi

*கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு

கடலூர் : கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி எண்ணூர் தனசேகரின் அறையில், செல்போன் சோதனை செய்ய சென்ற காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகர் என்பவர், கடந்த 8.1.2022 முதல் கைதியாக உள்ளார். இவர் மீது 9 கொலை வழக்குகள் உட்பட 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை அலுவலர் மணிகண்டனுக்கும், இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு எண்ணூர் தனசேகர், மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சிதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எண்ணூர் தனசேகரனின் தம்பி உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தனது அறையில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதன் பிறகு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை கடலூர் மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரியும் பிரித்விராஜ் (28) என்பவர் கைதி எண்ணூர் தனசேகர் அடைக்கப்பட்டுள்ள வெளிச்சிறை எண் 1க்கு சென்று செல்போன் ஏதும் இருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது எண்ணூர் தனசேகர் அவரிடம், என்னுடைய அறையிலேயே வந்து சோதனை செய்கிறாயா என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவரை காலால் எட்டி உதைத்து, கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் தனது ஆதரவாளர்கள் மூலம் உன்னை காலி செய்து விடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயமடைந்த காவலர் பிரிதிவிராஜை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார், எண்ணூர் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோதனை நடத்தியதால் தாக்குதல்

கைதி எண்ணூர் தனசேகரை ஒரு வழக்கு விசாரணைக்காக கடலூர் மத்திய சிறையில் இருந்து விழுப்புரம் நீதிமன்றத்திற்கு நேற்றுமுன்தினம் பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வழக்கு விசாரணை முடிவடைந்த பிறகு கைதி தனசேகர் அங்கிருந்த போலீசாரிடம் செல்போன் கேட்டுள்ளார். ஆனால் போலீசார் தர மறுத்துள்ளனர். பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு முறையும் கைது எண்ணூர் தனசேகரை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து சென்று வந்த பிறகு அவரது அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தின் பேரிலேயே நேற்று காலையும் அவரது அறைக்கு காவலர் பிரித்திவிராஜ் சோதனை செய்வதற்காக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi