மீண்டும் ஒரு யாத்திரையை தொடங்கி இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. முதல் யாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர்ந்தது. அந்த யாத்திரை பெயர் இந்திய ஒற்றுமை யாத்திரை. இப்போது ராகுல் தொடங்கியிருக்கும் யாத்திரை பெயர் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை. கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி முதல் கலவரத்தால் சிக்குண்டு கிடக்கும் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து ராகுல் தொடங்கியிருக்கும் இந்த யாத்திரை மார்ச் 20 அல்லது 21ம் தேதி மும்பையில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ராகுல் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை 2022 செப்டம்பர் 7 முதல் 2023 ஜனவரி வரை 136 நாட்கள் நடந்தது. தமிழ்நாட்டில் 4 நாட்கள், கேரளாவில் 18, கர்நாடகாவில் 21, ஆந்திராவில் 4, தெலங்கானாவில் 12, மத்தியபிரதேசத்தில் 16, ராஜஸ்தானில் 18, அரியானாவில் 12, டெல்லியில் 2, உபியில் 5, பஞ்சாப்பில் 11, இமாச்சலில் 1, ஜம்மு காஷ்மீரில் 11 நாட்கள் நடந்தது. 14 மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொண்ட ராகுல் கிட்டத்தட்ட4,080 கிமீ தொலைவை நடந்தே கடந்து இருந்தார்.
அந்த நடைபயணத்தின் முடிவால் கர்நாடகா, இமாச்சல், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடிந்தது. அதே சமயம் ராஜஸ்தானில் ஆட்சி பறிபோனது. மிகவும் நம்பிக்கையாக இருந்த மத்தியபிரதேசத்திலும் மீண்டும் தோற்றது. சட்டீஸ்கர் ஆட்சியும் கையை விட்டு போனது. இப்போது மணிப்பூரில் தொடங்கியிருக்கும் 2வது கட்ட ராகுலின் யாத்திரை நடைபயணம் மற்றும் பஸ் பயணமாகவும் அமைய உள்ளது. நாகாலாந்து, அசாம், அருணாச்சல், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர், உபி, மபி, ராஜஸ்தான், குஜராத் வழியாக இந்த பயணம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முடிவடைய உள்ளது.
மொத்தம் 67 நாட்கள், 15 மாநிலங்கள், 6713 கிமீ தொலைவுக்கு நடைபயணமாகவும், பஸ் மூலமாகவும் ராகுல்காந்தி இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 100 மக்களவை தொகுதிகள் வழியாக இந்த பயணம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உபியில் அதிகபட்சமாக 11 நாட்களும், அசாம் மாநிலத்தில் 8 நாட்களும், மபியில் 7 நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. நீதியாத்திரை என்று பெயர் வைக்கப்பட்டாலும், நிச்சயம் இந்த யாத்திரை வரவிருக்கும் மக்களவை தேர்தலை குறிவைத்து மேற்கொண்டு இருக்கும் பயணம் என்பது தெளிவானது.
பா.ஜவுக்கு மாற்றாக இந்தியா கூட்டணி உருவாகி இருக்கும் இந்த நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு பணிகளுக்கு முன்பு ராகுல்காந்தி முதற்கட்ட பிரசாரமாக இந்த நீதியாத்திரை மூலம் மக்களை சென்று சந்தித்து முடித்து இருப்பார். ஜன.22ம் தேதி நடக்கும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை எப்படி பா.ஜ தேர்தல் அஸ்திரமாக பயன்படுத்தி வருகிறதோ அதே போல் ராகுல் மேற்கொண்டு இருக்கும் இந்த யாத்திரை நிச்சயம், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, இந்தியா கூட்டணிக்கு வடமாநிலங்களில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக மாறும்.