டெல்லி: 2 நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு செல்கிறார். அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 24ம் தேதி ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை மக்களவை செயலகம் மீண்டும் வழங்கியுள்ளது. இதையடுத்து, 4 மாத இடைவெளிக்குபிறகு நேற்று முதல் அவர் மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்கெடுக்கிறார்.
இந்நிலையில் மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார். ராகுல் தன் சொந்த தொகுதி மக்களை சந்திக்க வயநாடுக்கு ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் செல்கிறார். அங்கு பிரமாண்ட பொதுகூட்டத்திலும் உரையாற்றுகிறார். மக்களவை எம்.பி.யாக மீண்டும் பதவியேற்ற பிறகு, ராகுல் காந்தி செல்வது இதுவே முதல் முறையாகும்.