சட்டீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நீதியாத்திரை நடந்து வருகின்றது. யாத்திரையின்போது நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது, பொதுமக்களின் பாக்கெட்டுக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது. அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித்துக்கள் மற்றும் ஆதிவாசிகள் நாட்டின் மக்கள் தொகையில் 74 சதவீதம் இருக்கின்றனர்.
ஆனால் இந்த சமூகங்களை சேர்ந்த ஒருவர் கூட நாட்டில் உள்ள முன்னணி 200 நிறுவனங்களின் நிர்வாகத்தின் உரிமையாளராக இல்லை. பாஜ இந்து ராஷ்டிரா என்று கூறுகின்றது. ஆனால் இந்த 74 சதவீதம் பேர் மற்றும் ஏழைகள் நாட்டில் இருந்து எதனையும் பெறவில்லை. ராமர்கோயில் திறப்பு விழாவில் ஏழைகள், தொழிலாளிகள், வேலையில்லாதவர்கள் அல்லது சிறு வணிகர்களை நீங்கள் பார்த்தீர்களா?
அதானி ஜீ, அம்பானி ஜீ, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் இதர மிகப்பெரிய தொழிலதிபர்களை தான் நான் பார்த்தேன். அவர்களது குடும்பத்தினர் மிகப்பெரிய அறிக்கைகளை கொடுத்தனர். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பணவீக்கத்தின் சீற்றத்தை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் அதானியும், அம்பானியும் சீன பொருட்களை விற்று லாபம் ஈட்டுகிறார்கள். இது பொருளாதார அநீதி. மக்களின் ஆதரவோடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும்” என்றார்.
* மோடிக்கு ஆதரவாக கோஷம் கை கொடுத்த ராகுல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நீதி யாத்திரையானது சட்டீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து தோடிபாரா வழியாக நேற்று காட்க்கோரா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது காவி தலைப்பாகை அணிந்த பலர் சாலை ஓரத்தில் நின்று கொண்டு அனுமனின் கொடியை வைத்துக்கொண்டு ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.
இதனை பார்த்த ராகுல்காந்தி தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று அங்கிருந்த பலரிடம் கை குலுக்கினார். பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏறி அவர்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, அன்பில் பெரும் பலம் உள்ளது. பாரத் ஜோடோ நீதியாத்திரைக்கு எதிராக பாஜ தொண்டர்கள் முழக்கமிடுகின்றனர். ஆனால் பொதுமக்களின் தலைவர் ராகுல் ஜீ அவர்களை சந்தித்தார். காட்சி இப்படி மாறிபோனது என்று பதிவிடப்பட்டுள்ளது.