மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒன்றரை ஆண்டாக தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அதிபர் புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்துள்ள நிகழ்வு உலக அரங்கில் பேசும் பொருளாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பையேற்று ரயில் மூலம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார். வோஸ்டாக்னி ராக்கெட் ஏவுதளத்தில் காரில் வந்து இறங்கிய கிம் ஜாங் உன்-ஐ அதிபர் புதின் கைகுலுக்கி வரவேற்றார்.
அதன் பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு நடத்தினர். கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வடகொரியாவின் எல்லைகள் முற்றாக மூடப்பட்ட பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவரை கிம் சந்திப்பது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பு இரு நாட்டு தலைவர்களும் 2019-ம் ஆண்டு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது ஒன்றரை ஆண்டாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் ஆயுத இருப்பு குறைந்ததால் அதை நிரப்ப வடகொரியாவின் உதவியை ரஷ்யா நாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலையில் வடகொரியா சென்ற ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வெடி மருந்துகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தன. தற்பொழுது வடகொரியாவிடம் அதிகளவில் வெடிமருந்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் புதின் கிம் ஜாங் உன் ஆகியோர் கையெழுத்திடலாம் என்று தெரிகிறது. பதிலுக்கு உணவு பொருள்கள், ஆற்றல், அதி நவீன ஆயுத தொழில்நுட்பங்களை வடகொரியா எதிர்பார்க்கலாம் தெரிகிறது. விமானத்தில் சென்றால் எளிதில் சுட்டு வீழ்த்தப்படும் அபாயம் இருப்பதால் வடகொரிய அதிபர் கிம் ரயிலில் சென்றதாக கூறப்படுகிறது.