புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மதுரையைச் சேர்ந்த 5 பேர் திருச்சியை நோக்கி, விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது லஞ்சமேடு என்ற இடத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லோடு வேன் மீது கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சுயநினைவு இல்லாததால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். அத்துடன் தூக்கம் கலக்கத்தில் வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுவதாக கவலை தெரிவித்த மக்கள், சிசிடிவி கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணிக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.