சுல்தான்பூர் லோதி: பஞ்சாப் குருத்வாராவில் நிஹாங்க் பிரிவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவலர் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். பஞ்சாபின் சுல்தான்பூர் லோதியில் உள்ள குருத்வாரா அகல் பங்கா சாஹிப்பை நிர்வகிப்பது தொடர்பாக நிஹாங்கின் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. பாபா மான் சிங் தலைமையிலான நிஹாங் பிரிவினரை குருத்வாராவில் இருந்து வெளியேற்றுவதற்காக போலீசார் முயன்றனர். அப்போது சாலையில் நின்றிருந்த போலீசார் மீது திடீரென சில நிஹாங் பிரிவினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 காவலர்கள் காயமடைந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.