![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/31-23.jpg?type=webp&quality=80)
நாக்பூர்: வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதற்காக பஞ்சாப்பில் இருந்து விமானத்தில் வந்த கும்பலை நாக்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நாடு முழுவதும் வங்கிகளின் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடிப்பதில் நிபுணர்களாக செயல்பட்டு வந்த பஞ்சாபைச் சேர்ந்த கும்பல், விமானம் மூலம் நாக்பூருக்கு வந்தது. அவர்கள் நாக்பூரில் உள்ள பெரிய ஓட்டலில் தங்கியிருந்து நகரில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையிடிக்க முயன்றனர். இவர்களின் திட்டத்தை அறிந்த போலீசார், அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து நாக்பூர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி ஜரிபட்காவில் உள்ள வங்கியின் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்பகுதியினர் கூச்சலிட்டதால், அவர்களின் கொள்ளை திட்டம் நிறைவேறவில்லை. அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
அதிர்ஷ்டவசமாக ஏடிஎம்மில் இருந்த பணம் கொள்ளை போகவில்லை. வங்கி ஊழியர் சையத் அலி அளித்த புகாரின் பேரில் ஜரிபட்கா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிசிடிவி காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்களை நோட்டமிட்டு வந்தோம். தொடர் விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மங்காப்பூரில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தனர். இவர்கள் 3 பேரும் பஞ்சாபில் இருந்து விமானம் மூலம் நாக்பூர் வந்துள்ளனர். தற்போது அவர்களில் மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில், மற்றொரு கூட்டாளியான ஜுகத் சிங்கை தேடி வருகிறோம்’ என்றனர்.