சண்டிகர்: உடல் நலக்குறைவால் காலமான பஞ்சாப் முன்னாள் முதல்வரும், ஷிரோன்மணி அகாலி தள தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி நேற்று நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.ஷிரோன்மணி அகாலி தள மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் 5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவர் தனது 95வது வயதில் நேற்று முன்தினம் காலமானார். கடந்த ஒரு வாரமாக மூச்சு திணறல் ஏற்பட்டதால், மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், பிரகாஷ் சிங் பாதலின் உடல் வைக்கப்பட்டிருந்த ஷிரோன்மணி அகாலி தளத்தின் கட்சி அலுவலகத்துக்கு சென்ற பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.