மதுரை: அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் விரக்தியின் உச்சகட்டமாக ரூ.25 கோடி செலவு செய்து எடப்பாடி பழனிசாமியை வசைபாடி உள்ளனர் என்று ஓபிஎஸ் மீது உதயகுமார் குற்றம்சாட்டினார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக திகழ்கிறார். நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் சுயநலத்துடன் நமது இந்த இயக்கத்தை அடமானம் வைக்க துடிக்கின்றனர். அதற்கு சாவுமணி அடிக்கும் வகையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. இதன்பிறகும் ஓபிஎஸ், கட்சிக்கொடியை பயன்படுத்தி திருச்சியில் மாநாடு என பொதுக்கூட்டத்தை நடத்தினார். எதற்காக இந்த கூட்டம்? தற்போது ஓபிஎஸ் சுயரூபம் தெரிந்துவிட்டது. ரூ.25 கோடி செலவழித்து ஓபிஎஸ் ஒரு பொதுக்கூட்டத்தின் மூலம், எடப்பாடியை கடுமையாக வசைபாடி உள்ளார். கட்சியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் விரக்தியின் உச்சக்கட்டமாக பேசி உள்ளனர். வரும் ஆக. 20ம் தேதி நடைபெறும் மாநாட்டினை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காண்பிப்பார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.