மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்குப்பகுதியில் புது மண்டபம் அமைந்துள்ளது. இங்கு கலைநயமிக்க சிற்பங்களும், 124 தூண்களும் உள்ளன. மண்டபத்தின் மையப்பகுதியில் நாயக்கர்கள் காலத்து 14 மன்னர்களின் ஓவியங்கள் உள்ளன. மிகச்சிறந்த கட்டிடக்கலையின் அடையாளமாகவும் உள்ளது. புது மண்டபத்தை பாரம்பரியமிக்க பகுதியாக அறிவித்து அங்கிருந்த 300 கடைகள் அகற்றப்பட்டன. தற்போது புது மண்டபத்தில் வைகாசி வசந்த உற்சவ நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், புது மண்டபத்தை புனரமைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட கோயில் நிர்வாகம் திட்டமிட்டு, ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உயர்நிலை குழு அனுமதித்தது. இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. துணை கமிஷனர் அருணாச்சலம் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.