புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறும் யோகா உடலையும் மனதையும் பலப்படுத்தும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இந்திராகாந்தி உள் விளையாட்டு மைதானத்தில் காலையில் நடைபெற்றது. அதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயக்கர் செல்வம் ஆகியோர் 9-வது சர்வதேச சிறப்பு யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: யோகா என்பது இந்தியக் கலை. பாரம்பரியத் தமிழ்க் கலை. அந்த யோக கலையை உலகெங்கும் பரப்பியவர் பிரதமர் மோடி. இஸ்லாமிய நாடுகளில் கூட யோக கலை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. யோக கலையானது, உடல் நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்தக் கூடியது. ஆகவே குடும்பத்தலைவி, குழந்தைகள் முதியோர் என அனைவரும் யோகக் கலையில் ஈடுபடுவது நல்லது.
புதுச்சேரி மாநில கல்வித்துறையில் யோக கலை மற்றும் தற்காலத்திற்கு ஏற்ப தற்காப்பு கலைகளை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் மனநலத்தை மேம்படுத்த யோகக் கலையை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது அவசியம் என்றார். நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் அமர்ந்து அவர் யோகப் பயிற்சி மேற்கொண்டார். நிகழ்ச்சியில் துறைமுகம் இயக்குநர் பாலாஜி, துணை இயக்குநர் வெங்கட்ராமன், துறைமுக வளாக இயக்குநர் கார்த்திக் சன் சுதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.