புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய அமைச்சராக, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.திருமுருகன் நியமனம் செய்யப்பட்டார். புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை பதவிநீக்கம் செய்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். அவர் அந்த கடிதத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தாரா? என்ற குழப்பம் நிலவியது . இந்நிலையில் சந்திரபிரியங்காவை நீக்கிய முதலமைச்சரின் கடிதத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கிடையே புதிய அமைச்சரை தேர்வு செய்ய முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, காரைக்கால் தொகுதியைச் சேர்ந்த மூன்று முறை எம்எல்ஏவான திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, ராஜவேலு அண்ணன் மகன் லட்சுமிகாந்தன் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக பேசப்பட்டது. பல்வேறு கடா ஆலோசனைக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.திருமுருகன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தொகுதி எம்.எல்.ஏ. திருமுருகனை அமைச்சராக நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில் புதுச்சேரியில் புதிய அமைச்சராக இன்று என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.திருமுருகன் நியமனம் செய்யப்பட்டார். காரைக்கால் வடக்கு தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருமுருகன்.