புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவுக்கு அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் (74). காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்பி என பதவிகள் வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இரண்டு முறை புதிய கட்சிகள் துவங்கினார். 2016ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவுக்கு சென்றார். அதன்பிறகு, அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார்.பின்னர், பாஜவிலிருந்து விலகியதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் கண்ணன் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில், நுரையீரலில் தொற்று ஏற்பட்டு சுவாசத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் உயிரிழந்தார். கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசியலில் அளுமைமிக்கத் தலைவராக திகழ்ந்த கண்ணன் மறைவுச் செய்தி, ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது. புதுச்சேரி மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அன்பைப் பெற்ற கண்ணன் சிறு வயதிலியே தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்.
அமைச்சர், சபாநாயகர், எம்.பி., பல்வேறு பதவிகளை வகித்தவர். அமைச்சராக இருந்த போது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வரவேற்பை பெற்றவர். தான் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர்.புதுச்சேரி மக்கள் நலன், மாநில வளர்ச்சிக்காக தனது வாழ்வை அர்பணித்த அவரது இழப்பு புதுச்சேரி அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பாத்தாருக்கும், அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,”எனத் தெரிவித்துள்ளார்.