மும்பை: பப்ஜி விளையாட்டின் மூலம் ஏற்பட்ட காதலால், பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அவரது காதலன் தலைமறைவாக உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் பந்த் நகர் போலீசில் அளித்த புகாரில், ‘சாண்டாக்ரூஸ் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் போது நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றித் திரிந்தோம். கடந்த சில ஆண்டுகளாகவே எங்களது காதல் நீடித்தது. அந்த நபர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.
அவரது பேச்சை நம்பி, அவருடன் ஓட்டலுக்கு சென்றேன். அங்கே என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். என்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துக் கொண்டார். ஆனால் அடுத்த சில மாதங்களில் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து பந்த் நகர் போலீசார், சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர்.