சென்னை: சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து இணை இயக்குநர் நலப்பணிகள் மற்றும் 19 மாவட்ட செயற்பொறியாளர்கள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் ஹஜ் யாத்திரைக்கு செல்பவர்களுக்கு போட, ஒன்றிய அரசிடமிருந்து 6300 டோஸ் தடுப்பூசி வந்திருக்கிறது. அதோடுமட்டுமல்லாமல் 945 டோஸ் எஸ்ஐவி என்கின்ற தடுப்பூசிகளும் வந்திருக்கிறது. இவை, ஹஜ் குழுவினரின் பரிந்துரையை ஏற்று மே 15 முதல் மே 25 வரை 19 இடங்களில் நடைபெறும் முகாம்களில் வழங்கப்படவுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா கடந்த 2022 ஏப்ரல் 27ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மே மாதம் இந்த மசோதா ஆளுநர் அலுவலகத்திற்கு ஒப்புதல் வேண்டி அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல்தர வேண்டி 7 முறை ஆளுநருக்கு அரசு தரப்பில் விளக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.