Tuesday, June 18, 2024
Home » கலைஞரின் பெயரில் அமைந்துள்ள மாபெரும் நூலகத்தை திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கலைஞரின் பெயரில் அமைந்துள்ள மாபெரும் நூலகத்தை திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Ranjith

சென்னை: ‘‘கலைஞரின் பெயரில் அமைந்துள்ள மாபெரும் நூலகத்தைத் திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்’’ என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எதிர்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டும் கலைஞரின் புகழ் போற்றும் வகையில், ஜூலை 15-ஆம் நாள், தமிழ் நகராம் மாமதுரையில் உலகத் தரத்திலான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்க இருக்கிறேன். அவர் எழுதிய பக்கங்கள், 2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இரண்டு லட்சம் என்ற பெருமையுடன், அவை அத்தனையும் அவர் ஏற்றுக்கொண்ட லட்சியத்தை நாடெங்கும் பரப்புவதற்காக எழுதியவை என்ற பெருமிதமும் இணைந்தே நிலைத்திருக்கிறது.

தலைவர் கலைஞர் எழுதிய நூல்களைக் கொண்டே ஒரு நூலகம் அமைத்து விட முடியும். சிறுகதை, புதினம், நாடகங்கள், உரைநடைகள், கடிதங்கள், கட்டுரைகள், கவிதைகள், தன்வரலாறு என எண்ணற்ற நூல்களை இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தந்தவர். தன் லட்சிய எழுத்துகளால் சமுதாயத்தைச் சில அங்குலங்கள் உயர்த்தியவர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் அமைந்துள்ள மாபெரும் நூலகத்தைத் திறந்து வைப்பதில் உங்களில் ஒருவனான நான் பெருமை கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர், சென்னை கோட்டூர்புரத்தில் பார்த்துப் பார்த்து உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மனதில் கொண்டு, மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைச் சிறப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். உங்களில் ஒருவனான நான் எண்ணியதைவிடவும், வேறு யாரும் எண்ணிப் பார்க்க முடியாத வகையிலும் எதிர்காலத் தலைமுறையின் அறிவாற்றலைப் பெருக்குகின்ற வகையில் தென் தமிழ்நாட்டின் அறிவு கோயிலாக மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. அது வருங்காலத் தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கும்படியான வாய்ப்புகளுக்கு வாசலாக – வழிகாட்டியாக நிச்சயம் இருக்கும்.

கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 மாலையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழுமத் தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறையினர், மாணவமணிகள் கலந்துகொள்ளும் அறிவுத் திருவிழாவாக இந்தத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

படிக்கும் பழக்கம் குறைந்து வருகிற காலத்தில் இத்தகைய பிரமாண்ட நூலகம் எதற்கு என்று வயிற்றெரிச்சல் அரசியல்காரர்கள் குமுறிக் கொண்டிருந்தாலும், மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகமானது படிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தி வளர்ப்பதற்கும், நேரடி நூல் வாசிப்பு மட்டுமின்றி, பல்வேறு தொழில்நுட்பங்களின் வாயிலாகக் கற்று உலகத் தரத்திற்கேற்ப தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களையும், இளைய தலைமுறையினரையும் உயர்ந்து நிற்கச் செய்யவும் துணை நிற்கும்.

பேரறிஞர் அண்ணா நிறுவிய திமுகவிற்கு மக்கள் அளித்த வெற்றியால், முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சித் திறனால், அன்று தாழ்ந்திருந்த தமிழகம் இன்று தலைநிமிர்ந்த தமிழ்நாடாக, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதுபோல, மாமதுரையில் திறக்கப்படவிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கி, தமிழர்களின் வாழ்வை உயர்த்தும். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் இன்னும் பல சின்னங்கள் அடுத்தடுத்து அமையவிருக்கின்றன. அத்தனையும் வடிவமைப்பில் எழில் மிகுந்தது. மக்களுக்கு என்றென்றும் பயன் தருவது, முத்தமிழறிஞர் கலைஞரின் படைப்பாற்றலும் நிர்வாகத் திறனும் போலவே நிலைத்தப் புகழைப் பெறக்கூடியது.

* கலைஞர் நூற்றாண்டில் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவை காலம் கடந்தும் நிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன். கலைஞர் நூற்றாண்டில் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும், மக்களுக்கு என்றென்றும் பயன் தரும், கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும்.இவ்வாறு அவர் டிவிட்டரில் கூறியுள்ளார்.

* 6 மாடிகளை அலங்கரிக்கும் நூலகங்கள்
2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி-நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் – பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்புகள் கண்களை விரியச் செய்யும் வகையில் வியக்க வைக்கின்றன.

You may also like

Leave a Comment

thirteen + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi