காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த ஆடி திருவிழாவில் நூதன போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பொடவூர், மடப்புரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குனராம்பாக்கம் மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், சிங்கல்படி உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4,750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பரந்தூர் விமான நிலையம் அமைக்க 13 கிராமத்தைச் சேர்ந்த மக்களும் 364வது நாளாக எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள கிராம தேவதையான எல்லை அம்மன் கோயிலின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. இதனையொட்டி கிராமம் முழுவதும் சீரியல் லைட் மூலம் விமானத்தை சின்னமாக வைத்து, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டத்தை நடத்தினர். மேலும், கோயில் முன்பு கிராம மக்கள் ஒன்றிய, மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.