சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளதால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால், மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. தமிழ்நாட்டில் நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது.
ஈரோடு, திருப்பூர், தேனி திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலையில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது. அது மேலும் வட கிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
அதன் பிறகு அது மேலும் வட கிழக்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும் வாய்ப்புள்ளது. பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து தீவிரப் புயலாகவும் வலுப்பெற்று வங்க தேசம் மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கேரள கடற்கரையை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரையில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் இயல்பை ஒட்டியே இருக்கும். தென் வங்கக் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.