சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நேற்று புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் கடந்த 2018 முதல் சங்கத் தலைவராக பணியாற்றி வருகிறேன். ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் சங்கத்தின் பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளோம். அன்று முதல் தொடர்ந்து பல்வேறு வழியில் அவர்கள் சங்கத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். போலியான லெட்டர் பேட், பில்புக், சீல், ரசீதுகளை தயாரித்து உறுப்பினர்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்து ரூ.22 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், யூனியன் வங்கி சீலை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். போலி லெட்டர் பேடில் எனது பெயர் இருப்பதால் பணத்தை கொடுத்து ஏமாந்த உறுப்பினர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகின்றனர் என்றார்.