Friday, June 14, 2024
Home » ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டி? வாக்காளர்களுக்கு சோனியா நெகிழ்ச்சி கடிதம்

ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டி? வாக்காளர்களுக்கு சோனியா நெகிழ்ச்சி கடிதம்

by Ranjith

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிடாத நிலையில் தனது குடும்பத்திற்கு ஆதரவு வழங்கும்படி ரேபரேலி மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றார். இதற்காக ஜெய்ப்பூரில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாநிலங்களவைக்கு போட்டியிடுவதால் மக்களவை தேர்தலில் தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் போட்டியிடப் போவதில்லை என்று சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி ரேபரேலி தொகுதி மக்களுக்கு சோனியாகாந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘‘இன்று நான் இன்று எப்படி இருந்தாலும் அது உங்களால் தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். உங்களது நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். இப்போது உடல் நலம் மற்றும் வயது பிரச்னை காரணமாக அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவிற்கு பிறகு உங்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் எனது இதயமும் ஆன்மாவும் எப்போதும் உங்களுடன் இருக்கும்.

கடந்த காலத்தை போலவே எதிர்காலத்திலும் நீங்கள் எனக்கு மற்றும் எனது குடும்பத்திற்கு ஆதரவாக நிற்பீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் இல்லாமல் டெல்லியில் இருக்கும் எனது குடும்பம் முழுமை அடையாது. ரேபரேலியுடன் எனது குடும்ப உறவுகள் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளன. இந்த ஒளி மிகுந்த பாதையில் நடப்பதற்கு எனக்கு இடம் அளித்தீர்கள். எனது மாமியார், கணவரை இழந்த பிறகு நான் உங்களிடம் வந்தேன். நீங்கள் என்னை இருகரங்களுடன் எற்றுக்கொண்டீர்கள்.

கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் பாதகமான சூழ்நிலையிலும் எனக்கு நீங்கள் அளித்த உறுதியான ஆதரவை எ்னனால் மறக்கவே முடியாது. பெரியவர்களுக்கு எனது மரியாதையையும், இளைஞர்களுக்கு எனது அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களை விரைவில் சந்திப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் தனது குடும்பத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சோனியாகாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளதால் மக்களவை தேர்தலில் ரேபரேலியில் பிரியங்காகாந்தி போட்டியிடக்கூடும் என்ற யூகங்கள் வலுத்துள்ளது.

You may also like

Leave a Comment

twenty − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi