மூணாறு: யானைகள் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, மூணாறு அருகே உள்ள ஆனையிறங்கல் அணைக்கட்டில் சுற்றுலா படகு சவாரிக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம், மூணாறு அருகே சின்னக்கானல் ஊராட்சியில் ஆனையிறங்கல் அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணையில் 2015ம் ஆண்டு முதல் சுற்றுலா படகு சவாரி நடைபெற்று வருகிறது. இங்கு 2 விரைவு படகுகள், 20 பேர் பயணிக்கும் ஜங்கர் படகு, 4 மிதி படகுகள், 7 பரிசல்கள், 10 கயாக்கிங் படகுகள் உள்ளன.
தேயிலை தோட்டங்களுக்கு நடுவே இந்த அணைக்கட்டு அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி வந்து படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி ஏராளமான வணிக நிறுவனங்கள், தெருவோர வியாபாரிகள் இப்பகுதியில் பிழைப்பு நடத்தி வந்தனர்.இந்நிலையில் ஆனையிறங்கல் அணைக்கட்டில் படகு சவாரி பகுதியில் யானைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அடுத்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதைதொடர்ந்து அரிசிக்கொம்பன் யானை விவகாரத்தில் அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் பேரில், ஆனையிறங்கல் அணைக்கட்டில் சுற்றுலா படகு சவாரிக்கு உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் சுற்றுலாவை நம்பி பிழைப்பு நடத்தி வரும் தெருவோர வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:
ஆனையிறங்கல் அணைக்கட்டில் படகு சவாரிக்கு விதித்த தடையை மறுபரீசீலனை செய்ய கேரள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.