சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இன்று எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள், தெளிவாக எழுதுங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.
தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்வித பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களை தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.