சென்னை: பிரதமர் மோடி சென்னையில் பங்கேற்கும் பாஜக பொது கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம், திருநெல்வேலி பொது கூட்டத்திற்கு அழைக்காத நிலையில் இன்றைய கூட்டத்திலும் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் பல்லடம், திருநெல்வேலியில் பிரதமர் மோடி கடந்த மாதம் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமே மேடையில் பங்கேற்றனர். குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
கடந்த மாதம் இரண்டு நாட்கள் தமிழகத்தில் பிரதமர் மோடி இருந்தபோதும் பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனிடையே, தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி இந்தியாவில் பிரதமராக வர வேண்டும் எனவும் பாஜக கூட்டணியில் தாங்கள் இருப்பதாகவும் பன்னீர்செல்வம் பேசி வருகிறார். ஆனால் பன்னீர்செல்வம் பலமுறை வெளிப்படையாக கருத்து தெரிவித்தும் பாஜக இன்னும் இவர்கள் கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கின்றனர். இன்றைய பாஜக பொதுக்கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சென்னையில் இல்லாமல் அவரது சொந்த ஊரான தேனியில் உள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திடம் தொலைபேசியில் கேட்டபோது, பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் எதுவும் கேட்கவில்லை. அடுத்த மூன்று தினங்களில் பாஜக உடன் கூட்டணி குறித்து முடிவு தெரியவரும் என்று தெரிவித்துள்ளார். இதுபோல், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் இன்றைய கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.