சென்னை: மீண்டும் தாம் ஆட்சிக்கு வராமல் தடுக்க வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக பிரதமர் மோடி கூறியிருப்பதை கடுமையான குற்றச்சாட்டாக கருத வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட பிரதமர் மோடி எனது ஆட்சிக்காலத்தை மீண்டும் தடுக்க வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன என கூறியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள திராவிட கழக தலைவர் கி. வீரமணி இந்த குற்றசாட்டைகளின் ஆதாரங்களை பிரதமர் மோடி தரவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். பிரதமர் மோடி கூறியிருப்பது திராவக வீச்சு போன்ற கொடுமையான குற்றசாட்டு என்று கூறியுள்ள கி.வீரமணி அவருக்கு எதிராக உடனடியாக தொடர் நடவடிக்கைகளையும், பிரச்சாரத்தையும் நடத்துவது அவசியம், அவசரம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
மறுபுறத்தில் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசிய வெறுப்பு பேச்சுக்கு நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடியின் மலிவான சொற்பொழிவை இந்த வரலாறு ஆவணப்படுத்தும் என்று கூறியுள்ள பிரகாஷ் ராஜ் அதிகாரத்திற்காக அதிதீவிரமாக உள்ள மன்னரை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்துக்களின் சொத்துக்களை பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்கும் என்று மோடி பேசிய பேச்சிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மோடியின் பேச்சு வகுப்பு வாதத்திற்கான பட்டவர்த்தனமான அழைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.