திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், நால்வர்கோயில் பேட்டையைச் சேர்ந்தவர் பழனி (65). இவர், திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்தக் குளக்கரையில் அமைந்துள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அக்கோயில் அருகே உள்ள அரசமரத்தின் உச்சி கிளையில் பூசாரி பழனி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
திருக்கழுக்குன்றம் போலீசார், பூசாரி பழனியின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடந்த சில மாதங்களாக பூசாரி பழனி சிறுநீரகத்தில் கல் அடைப்பு காரணமாக சிகிச்சை பெற்றும் அவதிப்பட்டு வந்ததாகத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.