சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விலைவாசி உயர்விற்கு ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகள், சர்வதேச சந்தை நிலவரம், உள்நாட்டு விளைச்சல் போன்றவை காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணமாக கருதப்படுவது பதுக்கல். உதாரணத்திற்கு, ஏப்ரல் மாதத்தில் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ 150 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்றால், விளைந்த தக்காளியை பதுக்கி வைத்து, கொள்ளை லாபம் சம்பாதிப்போர் மீது நடவடிக்கை எடுக்காததுதான் காரணம். பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.