திருச்சி: ‘நான்தான் அடுத்த ஜனாதிபதி, சாமிங்க சொல்லிட்டாங்க’ என்று கலெக்டரிடம் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்துமனுக்களை பெற்றார். அப்போது லால்குடி தாலுகா திருவளத்தூர் கிராமத்தை சேர்ந்த தமிழரசன்(50) என்பவர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார். அவரை அதிகாரிகள் வழிமறித்து மனுவை வாங்கிப்படித்தனர். அதில் இந்தியாவில் இருக்கும் பல தெய்வங்கள் கனவில் என்னிடம் பேசுகின்றன.
நான் ஜனாதிபதி ஆனால்தான் நாட்டு மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என்று என்னிடம் கையெழுத்து வாங்கி இருக்கின்றன. அது மட்டுமல்ல 1 லட்சம் தெய்வங்கள் சீட்டு போட்டு என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்துள்ளன. எனவே இந்த செய்தியை பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தமிழரசன் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மனுவை நாங்களே கலெக்டரிடம் அளித்து விடுகிறோம் என்று கூறி அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த விவகாரத்தால் கலெக்டர் அலுவலகம் கலகலப்பாக மாறியது.