புதுச்சேரி: புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). தனியார் கம்பெனி ஊழியரான இவருக்கு 11 மாதங்களுக்கு முன்பு தீபா (26) என்பவருடன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபா கடந்த 2ம் தேதி எல்லைபிள்ளைச்சாவடியில் உள்ள அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தின இரவு தீபாவுக்கு பிரசவ வலி ஏற்படவே பணியிலிருந்த செவிலியர்கள் மருந்து, மாத்திரைகளை கொடுத்ததாக தெரிகிறது.
அதன்பிறகு அவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், தீபாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து குழந்தையும், தீபாவும் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மருத்துவமனையை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ துறை அதிகாரிகள் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.