Friday, May 3, 2024
Home » இறால்களைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்!

இறால்களைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்!

by Porselvi

மீன், நண்டு போலவே இறால் வளர்க்கவும் பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மற்ற உயிரினங்களைப் போலவே இறால்களும் சில காரணிகளில் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி இழப்பை சந்திக்க வைக்கின்றன. இதனால் நோய்கள் தாக்காமல் இறால்களை வளர்ப்பது என்பது மிக முக்கியமானது. இதற்காக சில பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடல்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி பிரிவின் தலைவர் (பொறுப்பு) முனைவர் விஜய் அமிர்தராஜ்.உலகில் உள்ள அனைத்து உயிரினங்களைப் போல இறால்களும் பல்வேறு நோய்களால் தாக்கப்படக்கூடும். இதனால் அவை இறக்கவும் நேரிடும். ஆனால் சரியான நோய் மேலாண்மை முறைகளைக் கையாண்டால் இறால்களின் இறப்பை பெருமளவில் தவிர்க்க முடியும். இறால்களுக்கு ஒட்டுண்ணி, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் தரமில்லாத நீர் ஆகியவற்றால் நோய்கள் ஏற்படுகின்றன.

இந்தக் காரணிகளால் நோயுற்ற இறால்களைக் கீழ்க்காணும் அறிகுறிகளால் அடையாளம் காணலாம். நோய் தாக்கிய இறால்கள் சோர்வு நிலையில், குளக்கரையோரம் காணப்படும். அவை இயல்பான நிறம் மாறிக் காணப்படும். குடல் மற்றும் வால் பகுதியில் அரிக்கப்பட்டு, கருப்பு நிறமாக காணப்படும். ஒட்டுண்ணிகளின் வளர்ச்சி மேற்புறத்தில் காணப்படும். உணவுக் குழாய் உணவற்று காணப்படும். செவுள் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த அறிகுறிகளை வைத்து இறால்களுக்கு நோய்த்தாக்கம் இருப்பதை உறுதி செய்யலாம்.

இறால்களுக்கு வரும் முக்கிய நோய்கள்

வால் அழுகல் நோய்

இறால்களுக்கு இந்நோய் பாக்டீரியா அல்லது வளர்ப்புக் குளத்தின் அடி மட்டத்தில் அதிகப்படியான கழிவு சேர்வதால் ஏற்படுகிறது. குளத்தில் உயிர்ப்பொருள் இட்டு, இந்நோயினைக் குணப்படுத்தலாம்.

ரோட்டோசோவன் நோய்

இறாலின் ஓட்டுப் பகுதியின் மேல் வழவழப்பான படிவம் போல் காணப்படும். இந்நோயால் தாக்கப்பட்ட இறால் உணவு எடுப்பதை நிறுத்திவிடும். மேலும் அவை இறக்கவும் நேரிடும். இந்நோய் அதிகப்படியான உணவினைக் குளத்தில் கொடுப்பதால் ஏற்படுகிறது.

கருப்பு செவுள் நோய்

இந்நோய் குளத்தின் அடிமட்டத்தின் தரம் குறைவதினால் ஏற்படுகிறது. இந்நோயினால் இறால்கள் இறக்கவும் நேரிடுகிறது. குளத்தின் அடிமட்டத்தை சுத்தமாக வைப்பதன் மூலம் இந்நோயினைத் தவிர்க்கலாம்.

வெண்புள்ளி நோய்

இந்நோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. வெண்புள்ளி நோய், தாய் இறாலில் இருந்து பரவலாம். எனவே இந்நோயினை வரும் முன் தடுக்கலாமே தவிர, சிகிச்சை செய்திட இயலாது. இந்நோயால் தாக்கப்பட்ட குளத்தில் இறால்கள் மொத்தமாக ஒரே நேரத்தில் இறந்து விடும். இறால் வளர்ப்போருக்கு அதிக பிரச்னை இந்நோயால் ஏற்படுகிறது. சிறந்த மேலாண்மை முறையால் மட்டுமே இந்நோயினைத் தடுத்திட முடியும்.வளர்ப்புக் குளங்களில் இறால்களின் இறப்பானது, நோயால் மட்டுமன்றி நீரின் தரம் குறைவதினாலும் ஏற்படுகிறது. நீரில் கரைந்துள்ள உயிர்வளியின் அளவு குறையும் நிலையில், நீரின் நச்சுவாயுக்களின் அளவு அதிகரிக்கிறது. இதனால் இறால்கள் இறக்க நேரிடுகிறது. எனவே நோய் மேலாண்மையுடன் வளர்ப்புக்குளத்தின் நீர்த்தர மேலாண்மையும் அவசியமான ஒன்றாகும்.

நோய்த்தடுப்பு,பாதுகாப்பு முறைகள்

இறால் வளர்ப்பில் நோய்த் தாக்கியவுடன் சிகிச்சை மேற்கொள்வதை விட நோய்த் தடுப்பு முறைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். இறால்களுக்கு புரோட்டோசோவான்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைக்காளான்களால் உண்டாகும் நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வைரஸ் (வெண்புள்ளிநோய்) நோய்த் தாக்கினால் சிகிச்சை முறைகள் ஏதும் கிடையாது. மேலும் மொத்த இறால்கள் இறக்கும் நிலை ஏற்படும். எனவே இறால் வளர்ப்பில் நோய்த் தடுப்பு முறைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நீர் சிகிச்சை, நீர்த்தேக்கம், வெண் புள்ளி நோயற்ற இறால் குஞ்சுகள், நண்டு வலை, பறவை வலை ஆகியவை மூலம் இந்த நோய்களைத் தடுக்கலாம்.

நீர் சிகிச்சை: குளத்து நீரினை கிருமி நாசினி கொண்டு நீர் சிகிச்சை செய்ய வேண்டும். பின்னர் உரமிட்டு நீரில் பச்சயத்தைப் பெருக்கிட வேண்டும்.

நீர்த்தேக்கம்: நீர் சிகிச்சைக்கென்று, பிரத்யேக குளம் அமைத்து பயன்படுத்த வேண்டும். இதில் இருந்தே நீர் சிகிச்சை செய்ய வேண்டும்.

வெண்புள்ளி நோயற்ற இறால் குஞ்சுகள்: பி.சி.ஆர் ஆய்வு மூலம் நோயற்ற இறால் குஞ்சுகளை மட்டுமே இருப்பு செய்திட வேண்டும்.

நண்டு வலை: வெண்புள்ளி நோய்த் தொற்றினைத் தவிர்க்க குளத்தினைச் சுற்றி நண்டு வலை அமைத்தல் அவசியம்.

பறவை வலை: குளத்தின் மேல்பரப்பில், பறவைகளைத் தவிர்க்கும் வகையில் வலை அமைத்து நோய்த் தொற்றினைத் தவிர்க்கலாம்.

சீரான பருவநிலை கொண்ட காலங்களில் இறால் குஞ்சுகளை இருப்பு செய்ய முயல வேண்டும். அவ்வாறு செய்வது இறால் குஞ்சுகளை நோய்த் தாக்கும் சூழலைக் குறைக்கும். குறைவான அடர்த்தியில் (20-40 இறால்/சதுரமீட்டர்) இறால்களை வளர்ப்பது நோய் வருவதற்கான வழிகளை அறவே ஒழிப்பதற்கு சமம்.

 

You may also like

Leave a Comment

9 + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi