சென்னை: ராஜபாளையத்தில் நடந்த பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜாவின் 88வது பிறந்தநாள் விழாவில், குடும்பத்தினர், ஊழியர்கள் பங்கேற்றனர். குருபக்தமணி தர்மரக்ஷகர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜாவின் 88வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதனையடுத்து அபிநவ வித்யாதீர்த்த பாரதி வேத பாடசாலையில் அமைந்துள்ள குருபக்தமணி தர்மரக்ஷகர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து நினைவு ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா துவக்கி வைத்தார். ராம்கோ டெக்ஸ்டைல் பிரிவு ஊழியர்கள் ஏந்தி வந்த நினைவு ஜோதி ஓட்டமானது ராஜபாளையம் மில்ஸ்க்கு வந்தடைந்தது. பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை டிஎம்.கிருஷ்ணா கர்நாடக இசை நிகழ்ச்சியும், நேற்று மாலை சஞ்சய் சுப்ரமணியன் கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.