இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பில் பிஎம்எல்-என், பிலாவல் பூட்டோ சர்தாரி கட்சிகள் இடையே அதிகார பகிர்வு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் புதிய அரசு அமைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சைகள் அதிகபட்சமாக 93 பேர் வெற்றி பெற்றனர். அடுத்ததாக நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் 75 இடங்களையும், பிலாவலின் பிபிபி கட்சி 54 இடங்களிலும், எம்க்யூஎம்-பி கட்சி 17 இடத்திலும் வென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து நவாஸ், பிலாவல் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதனால் புதிய அரசு 3 வார கெடுவுக்குள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவாஸ், பிலாவல் கட்சிகள் 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பில் சமரசம் ஏற்படவில்லை. 3 ஆண்டு பிரதமர் பதவியும், அமைச்சரவையில் இடம் தருவதாக நவாஸ் கட்சி கூறியதை பிலாவல் ஏற்கவில்லை. அவர் ஆதரவு மட்டும் தருவதாகவும் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என கூறுவதால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நேற்றும் இரு கட்சிகளும் 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கிடையே, இம்ரானின் பிடிஐ ஆதரவு சுயேச்சைகள் சன்னி இத்தேஹாத் கவுன்சில் கட்சியில் இணைவதாக நேற்று அறிவித்துள்ளனர்.