சென்னை: வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின்நிலையங்களில் நேற்று காலை ஒரே நேரத்தில் கொதிகலன் குழாயில் கசிவு மற்றும் டர்பைன் பழுது காரணமாக மொத்தம் 1,100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுதை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் இயங்கி வரும் வடசென்னை அனல் மின்நிலையத்தின் 5 அலகுகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்குள்ள 2வது நிலையின் முதல் அலகில் நேற்று காலை கொதிகலன் குழாய் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதேபோல், வல்லூர் அனல் மின்நிலையத்தில் 3 அலகுகள் மூலமாக மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் அலகில் நேற்று காலை டர்பைன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின்நிலையங்களில் பழுது காரணமாக மொத்தம் 1,100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பழுதுகளை சரிசெய்யும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.