மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் பொறங்கால் கிராமம் உள்ளது. இங்கு கோயில் திருவிழாவின்போது தெருக்கூத்து, நாடகம், இன்னிசை கச்சேரி மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். எனவே, நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக தங்கள் கிராமத்தில் கலையரங்கம் கட்டித்தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
மனுவை பெற்ற எம்எல்ஏ, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். இதையடுத்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பொறங்கால் கிராமத்தில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. எம்எல்ஏ மரகதம் குமரவேல் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி பணியை துவக்கிவைத்தார். இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் ரங்கராஜன், அவைத்தலைவர் சந்திரபாபு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.